விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நர்சிங் படித்த முத்துலட்சுமியும் ராஜபாளையத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு முத்துலட்சுமியும் கோபிநாத்தும் ஜெயம்கொண்டம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் முத்துலட்சுமி கோபிநாத்தை பிரிந்து ராஜபாளையத்திற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.