
தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் முகமது குலாமிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தன்னுடைய தாய் இறந்து விட்டதாகவும் அவரை தன் வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதாவது கடந்த 2-ம் தேதி அவரின் தாய் ஆஷா பைரோஸ் திடீரென இறந்துவிட்டார். அந்த சமயத்தில் உறவினர்கள் யாரும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் நானே என் தாயை குழிதோண்டி புதைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர் அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.