திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு (26) கிராமத்தில் சாலமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பலவூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (19) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் வேலை பார்க்கும் போது பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வேலைக்கு செல்லாமல் நாங்குநேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன்பின் வள்ளியூருக்கு அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நாங்குநேரி தாலுகா ஆபீஸ் எதிரே உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் சாலையில் அவர்கள் செல்லாமல் தவறுதலாக மெயின் ரோட்டில் சென்றனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பைக்கின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ‌ தூக்கி வீசப்பட்ட இளம் பெண் மற்றும் வாலிபர் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.