10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் தாங்களே வங்கிக் கணக்குகளை தொடங்கவும், நிர்வகிக்கவும் முடியும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழியாகவே சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 10 வயதை கடந்தவர்கள் தங்களுக்கே உரிய சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி, டெபாசிட் செய்யவும், டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்களைப் பெற முடியும்.

இதேசமயம், இணைய வங்கி வசதிகளை வழங்குவது பற்றிய தீர்மானம் சம்பந்தப்பட்ட வங்கியின் விருப்பத்தின் பேரில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 2025 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

வணிக வங்கிகள், நகர்ப்புற மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் இந்தக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். சிறுவர்கள் தனது வங்கிக் கணக்குகளை நேரடியாக கையாளும் போது, வங்கி நிர்வாகம் அவற்றை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை, சிறு வயதிலிருந்தே நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதாரப் பொறுப்புணர்வு வளரச் செய்யும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.