திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையில் ஷீலா(60) என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் தனது மருமகள் சிந்துவுடன்(34) ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூரை அடுத்த சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்து  சென்றனர்.

இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர்கள் யார் என்று பார்க்க முடியவில்லை. இதற்கிடையே நிலைதடுமாறி ஷீலாவும் சிந்துவும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.