கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் அனுப்குமார் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கும் நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராக்கி (35) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை வழங்கி வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை அவர்கள் வேலைக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பணிபுரியும் பெண்களிடம் புதுச்சேரிக்கு செல்ல இருப்பதால் அதிகாலையில் வீட்டிற்கு வேலைக்கு வரும்படி கூறிய நிலையில் அதில் ஒரு பெண் சீக்கிரம் வந்தார்.

அவர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் கதவு திறக்காததால் அந்த பெண் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினார். அதன்பிறகு சிறுமி பிரியங்கா மற்றும் மற்றொரு குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்துள்ளனர். இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லை எனவும் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியதும் தெரியவந்த நிலையில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை.

ஆனால் இறப்பதற்கு முன்பு இரவு தன்னுடைய தம்பிக்கு அனுப்குமார் ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். மேலும் கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது குழந்தையின் மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடன் தொகை அதிகரித்திருக்கலாம் எனவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.