
கோயம்புத்தூர் மாவட்டம் களிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கம்மாள்(60). இவருக்கு ஆனந்த் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாளின் கணவர் உயிரிழந்தார்.
அங்கம்மாள் தனது வீட்டிற்கு கீழே மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மளிகை கடையில் சோதனை நடத்தி புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் அவரது கடைக்கு சீல் வைத்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் யாரிடமும் பேசாமல் இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறைக்கு சென்று தூங்கிய அங்கம்மாள் மறுநாள் காலை அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.