‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (04.12. 2023) மற்றும் நாளை (05.12.2023) ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்பு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியை பொருத்தவரையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணி ஆற்றி வருகின்றனர். மேலும் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே.என் நேரு அவர்கள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமையை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோன்று மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் வருவாய் நிர்வாக ஆணையர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்து அலுவலர்களுக்கு மீட்பு பணிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கி தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பெருமழையின் காரணமாக மின் கசிவுகள், மின்கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான எந்த விபத்துகளையும் தவிர்த்திடும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின் கம்பிகள் மற்றும் மின் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு களத்திலேயே இருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கென சென்னையில் மாத்திரம் மின்வாரியத்தை சேர்ந்த 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1317 மின்வாரிய பணியாளர்களும், செங்கல்பட்டிற்கு 2194 பணியாளர்களும், காஞ்சிபுரத்திற்கு 650 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மொத்தம் 3,831 பணியாளர்களோடு மிக்ஜாம் புயல் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்படி 8 மாவட்டங்களில் மொத்தம் 8592 மின்வாரிய பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதற்காக 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை தேவையான பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படுகிறார்கள்.

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய் தொற்று அபாயத்தை தவிர்க்கவும், தேவையான இடங்களில் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4320 மருத்துவர்கள் மருத்துவப்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை நாளை முதல் விரைவு படுத்த தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1000 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் மரங்கள் விழுந்து அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திட 1238 மரம் அறுக்கும் இயந்திரங்கள் இம்மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 337 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

மேலும் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது மிக கவனமாக கண்காணிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு அங்கு தங்கியுள்ளவர்களுக்கு இதுவரை 5022 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமைத்த உணவை பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வழங்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் நவம்பர் 30ஆம் தேதி துவங்கி இன்று (04.12 2023) காலை வரை 5,35,080 உணவுப் பொட்டலங்கள் சென்னையில் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 8 இடங்களில் 236 நிவாரண மையங்கள் துவக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 9634 நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளை சேர்ந்த 725 வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் தேவைக்கேற்ப மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 250 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இது மட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை அகற்றிட சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் 990 மோட்டார் பம்புகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 190, செங்கல்பட்டு மாவட்டத்தில் 243 என முன்னர் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 1929 மின்மோட்டார்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு துணையாக 906 ஜேசிபி இயந்திரங்களும், 154 ஹிட்டாச்சி இயந்திரங்களும் இந்த 8 மாவட்டங்களில் களப்பணியில் உள்ளன.

இந்த சூழ்நிலையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், கண்காணிப்பு பணிகளை விரைவுபடுத்தவும், மேலும் 7 அமைச்சர் பெருமக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், மாண்புமிகு உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கும், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர். கே பன்னீர்செல்வம் அவர்கள் ஆவடி மாநகராட்சிக்கும்,

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் கத்திவாக்கம், மணலி, மாத்தூர் சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கேகே நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளுக்கும், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. எவ. வேலு அவர்கள் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கும்,

மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சி.வெ. கணேசன் அவர்கள் சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்கும், மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தி உள்ளேன்.

நேற்று (03.12.2023) காலை 8:30 மணி முதல் இன்று (04.12. 2023) காலை 8:30 வரை சென்னையில் 15 இடங்களில் 20 செண்டி மீட்டருக்கு மேலாக குறிப்பாக பெருங்குடி போன்ற இடங்களில் 29.16 செ.மீ என்ற அதி கன மழை பெய்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்துள்ளது. உதாரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அதிகபட்சமாக 27.6 செ.மீட்டரும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 22.4 சென்டிமீட்டர் என பல பகுதிகளில் கடுமையாக மழை பெய்துள்ளது.

அது மட்டுமன்றி சென்னையில் இன்று காலை 8:30 முதல் மதியம் 2:30 வரை முடிந்த 6 மணி நேரத்திற்குள் சராசரியாக சுமார் 12 சென்டிமீட்டர் அளவில் அதிக கனமழை பெய்துள்ளது. இந்த பெருமழை இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த புயல் மற்றும் பெருமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொதுமக்களின் துயரை குறைக்கும் வகையில் தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு திட்டமிட்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தயார் நிலையில் இருந்த பல்வேறு அரசு துறைகளில் பணியாளர்கள் மற்றும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைத்த அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய செயல்பாட்டின் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தருணத்தில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த மிகச் சவாலான நேரத்தில் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இந்த மாபெரும் பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.