
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழவைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள் தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைக்காதீர்கள். உங்களால் இந்த வளத்தை உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்கலாம்.
அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம், அலைபேசி தருவோம், அதற்கு சார்ஜர் கொடுப்போம் என ஏமாற்றுவார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. மக்கள் பிரச்சினை கேட்டு அவற்றை தீர்க்க வந்தவர்கள். நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. ஒரு கட்டத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தவர்கள் இன்று நாம் வளர்ந்து விட்டதை கண்டு பொறாமைப்படுகிறார்கள்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இந்த சீமான் சிம்ம சொப்பனமாக இருக்கிறேன். என் பெயரை கேட்டால் அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. மக்களின் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்கிறது. கனிம வளங்களை கேரளாவுக்கு அள்ளி கொடுக்கிறார்கள். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். தமிழகத்தின் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம் என சீமான் கூறியுள்ளார்.