
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. மு.க ஸ்டாலின் ஆட்சியில் பட்ஜெட் வெளியிடும்போது இப்படி விளக்க கூட்டம் நடந்ததில்லை. முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்கு எப்போது திருவள்ளூர் சென்றாரோ அப்போதே அது சிறந்த பட்ஜெட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மத்தியில் உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கவர்னரும் அண்ணாமலையும் எப்போதும் இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். ஒரு மனிதருக்கு எப்போது வாய் கொழுப்பு அதிகமாகி விட்டதோ அப்போதே அவருக்கு அழிவு ஆரம்பம் ஆகிவிட்டது என்று அர்த்தம். உங்க கட்சியில் நீங்கள் துண்டை போட்டு உங்களுக்குப் பிறகு உதயநிதி அவருக்குப் பிறகு இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களையே தலைவர் பதவியில் இருக்க வைக்க போகிறீர்கள். எனக்கு பாஜக கட்சியின் தலைவராக தொடர முடியாது என்பது தெரியும். இந்த கட்சியில் ஒருவரே தலைவராக நீடிக்க முடியாது. ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இங்கிருந்து செல்வதற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விடமாட்டேன் என்றார்.