வங்காளதேசத்தில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடை ரத்து செய்ய வலியுறுத்தி  மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு உத்தரவிட்ட நிலையில் முப்படைகளின் தளபதி மாணவர்கள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனிஸ் என்பவரை பிரதமராக நியமிக்க கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நாட்டின் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனை அந்நாட்டு அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.