
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகத்தில் சில இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் பரவியது. குறிப்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் மீது இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. ஆனால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததால் பீகார் அரசும், தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இத குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வீடியோ உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாக சொல்வார்கள். தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும். அமைதியான வாழ்க்கையும் அமையும் என்று இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்பவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத பிரச்சனையை வைத்து ஒரு சிலர் இப்படி கீழ்த்தரமான அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாராவது வட மாநிலத்தவர்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.