
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புயல் சென்னைக்கு அருகே 110 km தொலைவில் உள்ளது. இது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புதுச்சேரி மற்றும் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதன்படி குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதேபோன்று நுங்கம்பாக்கம் பகுதியிலும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு எரி புயல் காரணமாக கடல் போல் கொந்தளித்துக் காணப்படுகிறது. சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்திலும் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இரு கறைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நெளம்பூர்-மதுரவாயில் இடையே முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் மாற்றிப் பாதையில் செல்லப்படுகிறது. மேலும் இதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியிலும் வினாடிக்கு 3200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 4 மணி நேரத்தில் தண்ணீரின் அளவு 8 மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் இன்று இரவு மாலை புயல் கரையை கடக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.