சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குருச்சியை சேர்ந்த பொன்னர் (31) திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அறிஞர் அண்ணா அரசு கல்லூரி அருகே சாலையில் மர்ம நபர் ஒருவர் வலிப்பு வந்தது போல நடித்துள்ளார். அவரின் அருகே மற்றொரு நபர் நின்று கொண்டு பிறரின் உதவியை கேட்டு கொண்டிருந்த நிலையில் அதனை நம்பி பொன்னர் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

அப்போது இருவரும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கி விட்டு அவரிடம் இருந்து ஐந்தாயிரம் ரூபாய், செல்போன் மற்றும் பைக் சாவியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து பொன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிய இருவரும் நாமக்கல் மோகனூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் நாமக்கல் கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த லாரி பட்டறை கூலி தொழிலாளி நவீன் (25), சென்னை நேசப்பாக்கத்தை சேர்ந்த மாரி (25) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.