தேனி மாவட்டத்தில் உள்ள போடி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ராஜா (68) என்பவர் தங்கி இருந்து முந்தல் வடக்கு மலை பகுதியில் ஏலத்தோட்ட வேலைக்காக சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுதி அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ராஜா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுக்கு அருகிலேயே சாப்பாடு தட்டு இருந்தது. இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே ராஜா இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.