சென்னை மாவட்டம் புதுப்பேட்டை பச்சையப்பன் தெருவில் சரவணன்(32) என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சரவணன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கொடுங்கையூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சரவணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.