அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இதற்கிடையில் சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அப்பெண் புகாரளித்தார்.

அதன்பின் அப்பெண்ணுக்கு புது ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அதே இருக்கையிலேயே அமருமாறு கூறினர். இதற்கிடையில் விமானம் டெல்லியில் தரை இறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்காதது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்பின் ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அப்பெண் புகார் கடிதம் எழுதினார்.

அதனை தொடர்ந்து பெண் பயணியிடம் அநாகரீமகாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் ஷங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணையின்போது ஷங்கர் மிஸ்ரா தரப்பில் பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு புரோஸ்டட் குறித்த பிரச்சினை இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த வயதான பெண்ணே சிறுநீர் கழித்ததாகவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.