சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவின் எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராத காரணத்தால், ஆசிரியை சித்ரா 400 முறை தோப்புக்கரணம் போட கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனால் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மனிதாபிமானமற்ற முறையில் நடந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாணவியின் தாய் பாண்டிசெல்வி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆசிரியை சித்ராவுக்கு விளக்கம் தரும் வாய்ப்பை அளித்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. ஆகவே, மாணவியின் உரிமை மீறப்பட்டதென தீர்மானித்த ஆணையம், தமிழக அரசுக்கு 2 லட்சம் ரூபாயை இழப்பீடாக மாணவியின் தாய்க்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதனை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க கல்வி துறையில் விழிப்புணர்வும், கண்காணிப்பும் தீவிரமாக வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.