சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். இந்த சிறுவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் பழகி வந்துள்ளான். இந்த காதல் விவகாரம் சிறுவனின் வீட்டிற்கு தெரிய வந்ததால் சிறுமி அடிக்கடி அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தாயாரிடம் சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமி அடிக்கடி தனக்கு வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. இதனால் கடந்த 7-ம் தேதி அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர் என மூன்று பேர் சேர்ந்து ஒரு தனியார் மருத்துவ கிளினிக்-க்கு சிறுமியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மறுநாள் அந்த சிறுமி அழுது கொண்டே இருந்ததால் சிறுமியின் தாயார் கேட்க தனக்கு நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் கடந்த 29ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றும் அவரது அம்மா அப்பாவை கைது செய்தனர். அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர் மற்றும் கருக்கலைப்பு செய்த டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.