இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மதிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கடந்த 2020 முதல் காணாமல் போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்ட நிலையில் இன்னும் 36,000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் ‘கோயா பயா’ போர்டலை தவிர பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்தும் 4 மாதங்களாக கண்டுபிடிக்கப்படாவிட்டால் காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் மாவட்டம் தோறும் மனித கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசு கூற்றுப்படி, பீகாரில் 2020 முதல் 24,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பீகாரை போலவே ஓடிசாவிலும் 2020 முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 4,852 பேரை காவல்துறையினர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 2020 முதல் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போன நிலையில் அவர்களில் 45,585 பேரை கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.