
கர்நாடக மாநிலம் சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேஷ் மற்றும் ரம்யா இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்கள். தற்போது நார்வே நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெங்கடேஷ் பணியாற்றி வருகின்றார்.
ரம்யா பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக வேலையை விட்டு நின்று உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தனது நான்கு வயது பெண் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து ரம்யா கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்பு தனது மைத்துனருக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தையை கொன்று விட்டதாக கூறியுள்ளார். உடனே அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரம்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது குழந்தையை கொன்றது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அதில் ஒரு குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதால் தற்போது பள்ளிக்கு அந்த குழந்தை சென்று வருகின்றது. ஆனால் மற்றொரு குழந்தை பிரதிகாவுக்கு வாய் பேச முடியாது. மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த குழந்தையை வளர்ப்பதற்கு ரம்யா மிகவும் சிரமப்பட்ட நிலையில் பல மருத்துவமனைகளிலும் குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன் தினம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.