
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான அஜித்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துக்கு திண்டுக்கல்லை சேர்ந்த மதுமிதா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். இருவரும் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தம்பதியினருக்கு ஜனனியா பிரீத்தி(1 1/2) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் சொந்தமாக ஒரு கார் வாங்கினார். இந்நிலையில் மதுமிதாவின் தாய் தமிழ்செல்வி தனது மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அஜித் தான் வாங்கிய காரில் தனது மனைவி, மாமியார், மகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று அதிகாலை 6 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கோமுகி ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அஜித், மதுமிதா, ஜனனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.