சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(40). இவர் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக இவர் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டுமான பணிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் ஜெகநாதனிடம் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெகநாதன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனையடுத்து ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தங்களது 13 வயது மகள் காவ்யாவை கயிற்றினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் ஒரே கயிற்றில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். ஜெகநாதனுக்கு அவரின் தாயார் போன் செய்து அவர் எடுக்காததால், சந்தேகமடைந்து வீட்டின் சன்னல் வழியாக பார்த்தபோது மகனும், மருமகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக  காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.