
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா கட்சிகள் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, 40 வருடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள். 30 வருடங்களாக ஊழல் செய்ததால் தான் ரெய்டு வருகிறது. நீங்கள் ரெய்டுக்கு பயப்படும் அதே நேரத்தில் நாங்கள் மக்களின் ஆதரவை பெறுகிறோம். இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பெரும்பாலான கட்சிகள் கூட்டம் நடத்தும்போது காசு கொடுத்து தான் மக்களை வரவழைக்கிறார்கள். ஆனால் இன்று பூத் மீட்டிங் என்று சொன்னவுடன் 100% பேர் வருகை புரிந்துள்ளனர்.
இதுதான் தமிழக வெற்றி கழகத்தின் உறுதி. எங்களுடைய தலைவர் அழைத்தால் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள் என்றால் அதுதான் எங்கள் தலைவருக்கு கிடைத்த வெற்றி. சுமார் 5000 இளைஞர்கள் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். இதுதான் எங்கள் கட்சியின் இளைஞர்கள் எழுச்சி. கடந்த 30 வருடங்களில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக வந்து நான் பார்த்தது கிடையாது. இதற்கு கண்டிப்பாக எங்கள் தலைவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மற்ற கட்சி எப்படி இருக்கிறது என்றால் கடந்த 30 வருடங்களாக மாவட்ட செயலாளர்கள் பதவி முதல் அனைத்து பதவிகளுக்கும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்களின் வெற்றி 30 வருடங்களாக ஊழல் செய்து மருத்துவக் கல்லூரி கட்டி செட்டில் ஆனது மட்டும்தான். அதனால்தான் அமலாக்க துறையினர் ரெய்டு வருகிறார்கள். அடுத்து வரும் 2026 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் தான் அதற்கு மாற்று என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி உறுதி என்று கூறினார்.