கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் சுப்பிரமணியின் மகன் நவீன் குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான ஸ்வாதி(20) என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக நவீன் குமார் மது போதையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்காமல், காலையில் வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். அதற்கு நவீன் குமார் உடனடியாக நான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி பணியில் இருந்த மருத்துவரையும், மருத்துவ பணியாளர்களையும் தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இதை தட்டிக் கேட்ட மருத்துவர் ராம் பிரபாகர் என்பவரையும் தாக்கியுள்ளார்.

இதே தொடர்ந்து நவீன் குமார் வெளியே சென்று தனது நண்பர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து மீண்டும் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அக்ஷயா ராம் என்பவரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் நவீன் குமார், அம்ரேஷ்(26), விக்னேஷ்(28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.