
காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்துள்ள பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது ஆக விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்கள் ஆக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார். அவர் தொடர்ந்து பரந்தூர் மக்களை சந்திக்கவும் திட்டமிட்டார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி பெற்று இன்று மதியம் 1 மணி அளவில் அவர் மக்களை நேரில் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அவர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அந்த மக்களை நேரில் சென்று சந்திக்கலாம். அவ்வாறு அவர்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களது கோரிக்கையை கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அரச அதனை பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.