பாளையங்கோட்டையிலுள்ள ஜோதிபுரம் திடலில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி பா சிதம்பரம் பேசியதாவது, வட மாநிலங்களில் ஏறக்குறைய பல மாநிலங்களில் பா ஜனதா ஆட்சி நடக்கிறது. ஒரு நாடு- ஒரு மதம், ஒரு நாடு-ஒரு மொழி, ஒரு  நாடு-ஒரே கலாச்சாரம், ஒரு நாடு- ஒரு சட்டம், ஒரு நாடு- ஒரு உடை என சொல்லி பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறு செய்தால் இந்தியா ஒற்றுமையாக இருக்காது எனவும், அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சாசனத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது எனவும் கூறினார்.

இந்த அரசியல் சாசனத்தை காலணி ஆதிக்க சாசனம் என பாஜக சொல்லி வருகின்றதால் இன்றும் ஜாதியா ஆதிக்கம் உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 6.8% வளர்ச்சியை பெற்ற இந்தியா தற்போது 5. 6% சதவீதம் வளர்ச்சிதான் அடைந்துள்ளது. இந்திய நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை. ஆனால் பசியால் வாடுகின்றார்கள். அதோடு பல குடும்பங்கள் இரவில் உணவு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை குஜராத் முதல் அமைச்சராக இருந்த மோடி எதிர்த்தார். பிரதமரான பின் அதனை எதிர்க்க முடியவில்லை. சராசரியாக 100 நாள் வேலைத்திட்டத்தில் கடந்த ஆண்டு மக்களுக்கு 57 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்த நிலையில் தற்போது 44 நாட்களாக குறைந்துவிட்டது.

இந்த ஆண்டு ரூபாய் 86 ஆயிரம் கோடி மட்டுமே திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காலப்போக்கில் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க போகின்றார்கள். வருமான வரி கட்டும் அனைவருக்கும் ஒரே நிலையில் சலுகையை மத்திய அரசு அளிக்கிறது. ஏழை எளிய மக்கள் குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை. மேலும் இந்தியாவில் ஏறத்தாழ 35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இளைஞர்களில் 10% பேரும் படித்த பட்டதாரிகள் 13 % பேரும் 40 வயது வரையிலும் வேலை இல்லாமல் உள்ளனர். அதோடு பெரும் பணக்காரர்களுக்கு 2 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனை ரத்து செய்ய முடியும் என்றால் கல்வி கடனை ஏன் பாஜக அரசால் ரத்து செய்ய முடியவில்லை. இந்த அரசு மேல்தட்டு மக்களுக்கும் மேல் வர்க்கத்திற்கும் ஆன அரசு சாதாரண பின் தங்கிய ஏழை மக்களுக்கான அரசு இது அல்ல என்று அவர் பேசினார்.