சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தாகவும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், எனவே சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்ட  சான்றிதழ்களை வழங்க மட்டுமே வருவாய் துறையினருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

அதேவேளையில் இதுபோல சான்றிதழ்களை வழங்கினால் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதி  மதமற்றவர் என சான்று வழங்கப்பட்டால் எதிர்கால சந்ததியினரின் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும். இத்தகைய சான்றிதழை வழங்குவது சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் அரசின் உத்தரவுப்படி கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை படிவங்களில் உள்ள அந்த சாதி, மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படி விட்டு விடலாம் எனவும், அதற்கு உரிமை உள்ளதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்..

அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை சாதி மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், அந்த சான்றிதழை வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..