
மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுமி கிட்டத்தட்ட அரை மணி நேரமாக தண்ணீரில் தத்தளித்த நிலையில் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு தனியார் பள்ளியின் அஜாக்கிரதை தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது தண்ணீர் தொட்டி திறந்து கிடந்த நிலையில் அதனை சரிவர மூடாமல் விட்டதால்தான் குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்தப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியில் இருந்த 8 ஆசிரியர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இந்த பள்ளியின் தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.