
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14 இன்று தொடங்குகின்றது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வருகின்ற ஜூலை 10 இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்டிஏ சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாமக வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.