மராட்டிய மாநிலம் நாக்பூரில் அஜய் வான்கடே (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் வரம் தேடி இணையதளம் மூலமாக ஜோத்சனா ஆக்ரே(32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஜோத்சனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்நிலையில் அஜய் வீட்டார், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவருக்கு வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு அஜய் ஜோத்சனாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளார்.

இருப்பினும் ஜோத்சனா மீண்டும் அஜயை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். திருமண வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்த அஜய், தனது முன்னாள் காதலியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆகஸ்ட் 28ம் தேதி ஜோத்சனாவை நேரில் வரவைத்து, இருவரும் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அதன் பின்பு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதனை குடித்த ஜோத்சனா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனே அஜய் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் அவரது உடலை அங்கே புதைத்துள்ளார். அதோடு தான் கொலை செய்தது, வெளியே தெரியாமல் இருக்க உடலின் மீது சிமெண்டை ஊற்றி மூடியுள்ளார். இதற்கிடையில் ஜோசியனாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அஜய்யை கைது செய்து ஜோத்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை பார்க்கும்போது மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் திரைப்படப் பாணியில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.