
கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தன் கர்ப்பிணி பசுவுக்கு ஹிந்து முறைப்படி வளகாப்பு நடத்தி, 500 பேருக்கு விருந்தளித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹாசனில் தொழிலதிபர் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தன் இல்லத்தில் பசுக்கள், காளைகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். பெங்களூரில் பிடதி அருகே உள்ள கிராமத்திலிருந்து ஹள்ளிகார் இனத்தைச் சேர்ந்த 4 மாத பெண் கன்று குட்டியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இருந்தார்.
அதன் பெயர் கவுரி. தற்போது கவுரி கர்ப்பமாக இருப்பதால் அதற்கு வளகாப்பு நடத்த முடிவு செய்தார். அதன்படி சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில் பசுவுக்கு நேற்று இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. பெண்களுக்கு நடப்பது போலவே அனைத்து சடங்களும் நடைபெற்றது. இதில் கவுரியை அலங்கரித்து பூமாலைகள் அணிவித்தனர். வெற்றிலை, பச்சை நிற வளையல்கள், தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் விருந்தினராக பங்கேற்றனர்.
இவர்களுக்கு 5 விதமான சாதம் உட்பட பிரம்மாண்டமான விருந்து நடைபெற்றது. பசுவின் கர்ப்ப காலம் கூட ஒரு 9 மாதங்கள் தான். இன்னும் ஒரு வாரத்தில் கவுரிக்கு பிரசவமாக உள்ளது. இதனால் தினேஷ் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வளைகாப்பு நடித்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த இன பசுக்கள் உள்நாட்டு இனமாகும். தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை.
எனவே இந்த இன பசுவை வாங்கி வளர்க்கின்றேன். கர்ப்பம் தரித்துள்ள கவுரிக்கு வளைகாப்பு நடத்தியதன் வாயிலாக பசுக்களை பாதுகாக்கும் படி விவசாயிகள், கால்நடை துறை பிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வெறும் வியாபாரம் நோக்கில் பசுக்களை வளர்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.