
உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி போட்டு தனது கணவர் அனுஜ் குமாருக்கு கொடுத்துள்ளார். அப்போது அதனை குடித்த அவர் சில மணி நேரங்களில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிபட்டார்.
பாதிக்கப்பட்ட அனுஜ்குமாரை உறவினர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் குடித்த காப்பியில் விஷம் கலந்துள்ளது என்று கண்டுபிடித்த நிலையில் அதனை உறவினர்களிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போது அவருடைய மனைவி பிங்கி காணாமல் போய்விட்டார் என்பது தெரிய வந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பிங்கி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்களது திருமணம் கட்டாய திருமணம் என்றும், பிங்கிக்கு ஏற்கனவே ஒரு நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த காதலை தொடர்வதற்காகவே தனது கணவனுக்கு விஷம் வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்த நிலையில் அதிகாரிகள் பிங்கியை தீவிரமாக தேடி வருகிறார்கள் .மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.