சிவகங்கை மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்டு 12 நாட்களே ஆன நிலையில், மனைவி மரணம் அடைந்ததின் காரணமாக, கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 27 வயது முத்துமணி, தனது 30 வயது கணவர் ராமையாவுடன் கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முத்துமணி பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில்  லேசான காயமடைந்த ராமையா  மனைவியின் மரணம் குறித்து அறிந்ததும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினார். தன்னுடைய மனைவியை இழந்த துயரத்தை தாங்க முடியாத காரணத்தால், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.