
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். தற்போது சம்பா சாகுபடி முன்கூட்டியே தொடங்கிய விவசாயிகள் சிலர் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துள்ளனர்.
ஆனால் தாமதமாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்த விவசாயிகள் ஏராளமானவர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் அனைத்தும் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது. மேலும் சிலருக்கு நெல்மணிகள் முளைத்துவிட்டது. பலர் நீரை வடியவைத்து அறுவடை செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது எந்திரம் மூலமாக நீடாமங்கலம் பகுதியில் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.