
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வட மாநிலத்தவர் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழ் மொழியை படிக்க எடுக்கும் முயற்சிகளை குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதோடு வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும், அதோடு அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும், மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும், வட மாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்சிவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தாங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்கும் மாறும், அவ்வாறு சேர்ந்து கல்விப் பயலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித்தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.