மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார்.

அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில இளைஞர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் அவதூறு வார்த்தைகளை கற்றுக் கொடுத்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முருட்- ஜன்ஜிரா கோட்டைக்கு சென்ற அவர் ஒரு உள்ளூர் இளைஞரிடம் வரலாற்று விவரங்களை கேட்க முயன்றார். அப்போது அந்த இளைஞர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா குட்கா போன்றவற்றை வெளியே எடுத்துக்காட்டினார்.

அதனை பயன்படுத்த சுற்றுலா பயணி ஆர்வம் காட்டியதும், அந்த இளைஞர் அவற்றைப் பற்றி விளக்கியதுடன், அதனை பயன்படுத்த கூறினார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் இதை பார்த்த மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது தடை செய்யப்பட்ட பொருள்கள் வழங்கியதற்கும், அநாகரிகமாக நடந்து கொண்டதற்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டு மதிப்பை பாதிக்க கூடியது என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.