
சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம் பெண்ணின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் அவர் சரிந்து விழுந்தார். அதோடு இளைஞர் அவரது கை மற்றும் கழுத்துப் பகுதியில் தன்னைத்தானே அறுத்துக் கொண்டார்.
இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சம்பந்தப்பட்ட இளைஞர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனபிரியன்(21) என்பது தெரிய வந்தது. அதோடு இளம் பெண் பிரியா(22) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் நேரில் சந்திக்க விரும்பியுள்ளனர். இதற்கிடையில் இளைஞர் ஐடிஐ மட்டும் தான் படித்திருக்கிறார் என்றும், அவர் தன்னை விட ஒரு வயது சிறியவர் என்பதும் தெரிய வந்தது. இதனால் அவர் காதலை கைவிட நினைத்துள்ளார். மேலும் தனது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையின தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.