
தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற இருந்தது. இதனால் பத்ரகாளி தனது உறவினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குமந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி அருகில் இருந்த டீ கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்திரகாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சூர்யா, டீக்கடையில் இருந்த பூதப்பாண்டி, கார் டிரைவர் யாசர் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்திரகாளியின் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.