
கடந்த வாரம் அமெரிக்க நாட்டில் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மின் அஞ்சலில் தெரிவிக்காத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ஊழியர்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு அனுப்பப்படும் மின் அஞ்சலுக்கு பதிலளிக்கவும் கோரியிருந்தார். இந்நிலையில் ஒரு வார கால பணி குறித்து மின் அஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இருப்பினும் எலான் மஸ்க் கொடுத்த காலக்கெடு அமலில் தான் உள்ளது என்றும் ஊழியர்கள் மஸ்க் மின் அஞ்சலுக்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
ஊழியர்கள் எலான் மஸ்கின் மின் அஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடியாது என்று அரசின் மனித வளத்துறையாக செயல்படும் நிர்வாக அலுவலகம் சார்பில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அரசுத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் என்னென்ன என்பதை விவரிக்க வேண்டும் என்று நிர்வாக அலுவலகம் கூறியுள்ளதாக தெரிகின்றது. இவ்விவகாரத்தில் ஏற்கனவே எலான் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய அரசு ஊழியர்களை என்ன செய்வதென்றும் அவற்றை எப்படி ஆய்வு செய்வது என்பது குறித்து நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்று தெரிகின்றது.