கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அதன் பின் அந்த வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, உண்மையில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படவில்லை என்று அர்த்தம் கிடையாது. எனவே சமூகத்தில் பாலின நடுநிலை அவசியமாக உள்ளது.

மனுதாரர் தனது விவாகரத்து மனுவை சிக்கமகளூரு மாவட்டத்திலுள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் இருந்து, சிவமோகா மாவட்டம் மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அந்த மனுவில் நீதிமன்ற விசாரணையில் தவறாமல் கலந்து கொள்ளுவதற்காக நான் எனது வீட்டில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை எதிர்த்த கணவர் தான் 9 மற்றும் 7 வயதுடைய 2 குழந்தைகளை நான் வளர்த்து வருகிறேன். இவ்வாறு வழக்கை மாற்றினால் எனக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாட பொறுப்புகளை நிர்வகிப்பதில் சிரமம் அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம் மனைவியின் சிரமத்தை விட கணவனின் சிரமம் அதிகமாக இருக்கும் என்று கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் சமத்துவம் அதன் உண்மை அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்க கூடாது, பெண்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டுத்தக்கதாக இருந்தாலும், நமது ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.. இதன் விளைவாக வழக்கை மாற்றினால் கணவன் அதிக சிரமத்தை எதிர்கொள்வார் என்று கண்டறியப்பட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.