தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வைணவம் சைவம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்தார். அவர் அமைச்சர் பதவியில் இருக்கும் போது மதரீதியாக கருத்துக்களை தெரிவிக்கும் போது பொதுமக்களின் மனம் புண்படாத வகையில் இருக்க வேண்டும், ஆனால் அவர் மிகவும் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதனால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிகளுக்கு, மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரித்து எடுத்துக் கொள்வதாக கூறிய தலைமை நீதிபதி, அமைச்சர் பொன்முடி தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு உள்ளாரே? அவரைக் கட்சியின் பதவியில் இருந்து நீக்கியதாகவும் பத்திரிக்கை செய்தி வந்துள்ளதே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.