ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் செய்து வருகின்றன. நேற்று இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சியை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் பயிற்சியும் ஒத்திகையும் நடந்துள்ளது. இதில் சுகோய் 30 ரக விமானங்கள் ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதற்காக ஹரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து இரண்டு ரபேல் விமானப்படை பிரிவுகள் பயிற்சி தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான ஐ என் எஸ் சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இது சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக்கூடிய திறன் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்திய கடற்படைக் கூறியதாவது ஏவுகணைகளை அளிக்கக் கூடிய திறன் கொண்ட உள்நாட்டு வழிகாட்டப்பட்ட ஐ என் எஸ் சூரத் என்னும் போர்  கப்பலானது தனது இலக்கை துல்லியமாக தவிர்க்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை வெளிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.