புதன்கிழமை டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகின்றது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே 2025 – 2026 நிதியாண்டிற்கான மதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூபாய் 12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மாதம் ரூபாய் 1 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ஆர்.கே. புரம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, நேருஜி காலத்தில் நீங்கள் 12 லட்சம் சம்பாதித்து இருந்தால் உங்கள் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை அரசாங்கம் வரியாக எடுத்துக் கொள்ளும். இதுவே இந்திராஜியின் ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் ரூபாய் 12 லட்சத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் வரியாக போகும் என்பதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்  அன்றைக்கு அப்படித்தான் இருந்தது. அதனால் தான் இன்று இதை விளக்குகிறேன் என்று தெரிவித்தார். மேலும் 10 – 12 ஆண்டுகளுக்கு முன்பு கூட காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் 12 லட்சம் வருமானத்திற்கு ₹2.6 லட்சத்தை வரியாக செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் தனது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பட்ஜெட் அதே வருமானத்திற்கு பூஜ்ஜிய வரியை உறுதி செய்கிறது என்று கூறினர். இந்திரா காந்தி, நேரு ஆட்சி நடந்த காலகட்டம் 40-50 ஆண்டுகளுக்கு முன்பாகும். அப்போதைய சூழலில் ரூபாய் 12 லட்சம் என்பது இன்றைய மதிப்பிற்கு பல கோடிகள் ஆகும். ஆகவே மோடியின் இந்த ஒப்பீடுகள் மக்களை முற்றிலும் தவறாக வழி நடத்துகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.