சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிக்கல் சூபர்வைசர் அருள்குமார் (29) என்பவர்  சந்தியா (19) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, இருவரும் தனி குடித்தனமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், அருள்குமாரின் வருவாய் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

2019 மார்ச் 30ஆம் தேதி, அருள்குமார் தனது மனைவி சந்தியாவை பார்த்து பேச நினைத்து நெசப்பாக்கத்தில் உள்ள சந்தியாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அருள்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதற்கான புகாரை சந்தியாவின் தாயார் சரிதா போலீஸில் அளித்தார்.

அருள்குமாரின் மீது எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் காவல்துறையின் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை கருத்தில் கொண்டு, அருள்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.