
ஓபன் ஹெய்மர் படத்தில் VFX காட்சிகள் பயன்படுத்தப்படவில்லை என அப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் படம் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது அதிரடியான சண்டை காட்சிகளும், அசத்தலான VFX காட்சிகளும் தான். படத்தில் காட்டப்பட கூடிய அனைத்தும் உண்மை என்று நம்ப வைக்கும் அளவிற்கு தத்ரூபமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
VFX தொழில்நுட்பத்தால் எதையும் படத்திற்குள் காட்சிப்படுத்தி விட முடியும் என்ற போதிலும், உண்மையாக வடிவமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி தரக்கூடிய உணர்ச்சிகளை செயற்கையான முறையில் உருவாக்கப்படும் காட்சிகள் தருவதில்லை என்பதை ஆணித்தரமாக நம்பக்கூடியவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். நோலன் படம் என்றாலே பிரம்மிப்பு தான்.
காரணம் அவருடைய வித்தியாசமான கதையம்சம், எவ்வளவு பெரிய ஆக்சன் காட்சியாக இருந்தாலும் VFX இல்லாமல் அதை உண்மையாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஆகியவைதான். கிறிஸ்டோபர் நோலன் VFX காட்சிகளை எப்போதும் பெரிதாக விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான டேனட் படத்தில் கூட விமானம் விபத்தாகக்கூடிய காட்சி ஒன்று இருக்கும்.
அதை சிறிதளவு கூட வி எப் எக்ஸ் பயன்படுத்தாமல் தத்ரூபமாக நிஜமாகவே விமானத்தை மோத விட்டு வெடிக்கச் செய்து படம் ஆக்கினார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் ஓபன் ஹெய்மர். இத்திரைப்படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் இரண்டாம் உலகப்போரில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட வி VFX பயன்படுத்தப்படவில்லை என கிறிஸ்டோபர் நோலன் தற்போது தெரிவித்துள்ளார்.
அவரது படத்தில் வரும் சாதாரண ஆக்ஷன் காட்சிகளே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இதில் அணுகுண்டு வெடிக்கும் காட்சியை ஜீரோ VFX இல் அவர் எப்படி எடுத்திருப்பார். இது எப்படி சாத்தியமானது என சினிமா ரசிகர்கள் அனைவரும் படத்தை திரையில் காண ஆவலாக உள்ளனர்.