திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி செல்வி (35) என்பவரிடம் பேசியுள்ளார். செல்வி பாலக்கோடு பகுதியில் ஹோம் கேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முகுண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நளினி (38) என்பவரை செல்வி அஞ்சலக அதிகாரியின் தாயாரை பராமரிக்க வேலைக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் நளினி தினம் தோறும் அதிகாரியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அப்போது அந்த அஞ்சலக அதிகாரிக்கும், நளினிக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி நளினி அதிகாரியை தனது செல்போனில் தவறான முறையில் நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதன் பின் அந்த வீடியோவை ஹோம்கேர் நிறுவனம் நடத்தி வரும் செல்விக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து செல்வி அஞ்சலுக அதிகாரிக்கு இந்த வீடியோவை அனுப்பி சுமார் ₹5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலக அதிகாரி ரூபாய் 2.30 லட்சம் பணம் செல்வியிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மீதமுள்ள பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார் செல்வி. இதனால் அதிகாரி செல்வியின் அழைப்பை தொடர்ந்து எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வி தனது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியர் ஆன விமல்ராஜ் (30) வீடியோவை அனுப்பி மீதி பணத்தை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து விமல்ராஜ் அஞ்சலக அதிகாரியின் வீட்டிற்கு சென்று மிரட்டி பணத்தை கேட்டுள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த அஞ்சலக அதிகாரி திருப்பத்தூர் டவுன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நளினி, செல்வி மற்றும் விமல்ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் உள்ள செல்போன் வீடியோக்களை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து 3 பேரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் வேலூர் மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அரசு அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.