
ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர் இபிஎஸ் அணியில் இணைய இருப்பதால் பிரார்த்தனை முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக இதுகுறித்து பேசியிருந்த அவர், 1975 ஆம் வருடம் அதிமுகவில் உள் கட்சி பிரச்சனை ஏற்பட்டபோது சிக்கல் தீர்ப்பு குழு என்ற அமைப்பு ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார். இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியில் எனக்கு துளி அளவு கூட விருப்பமில்லை. அவருடைய செயல்பாடுகளை அறிந்து அவரை விட்டு நான் பிரிந்து மூன்று மாதம் ஆகிறது. ஓபிஎஸ் ஆல் இனிமேல் எதுவுமே செய்ய முடியாது அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியுள்ளார்.