
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலைமை வருகிறது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்கு ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இது சமீபத்திய காலங்களில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மிகப்பெரிய கொடிய தாக்குதல் ஆகும். நான் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். பாகிஸ்தான் உடனும் நெருக்கமாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். மேலும் அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக அந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அனேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியோ அல்லது வேறு வழியோ தீர்வை கண்டுபிடிப்பார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்று கூறினார்.