கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை புதூரில் ஊர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஊர்மிளாவுக்கு குறுந்தகவல் வந்தது. அவர் தான் சமூக வலைதளம் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊர்மிளாவை டெலிகிராம் குழுவில் இணைத்து விட்டுள்ளார்.

இதனையடுத்து ஒரு இணையதள லிங்கை அனுப்பி விவரங்களை பதிவு செய்தால் கமிஷன் தொகை கிடைக்கும் என கூறியுள்ளார். அதனை நம்பி சில விவரங்களை பதிவு செய்தவுடன் ஊர்மிளாவுக்கு 210 ரூபாய் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் கூறியதை நம்பி ஊர்மிளா 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வரை ஆன்லைனில் முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே மோசடி செய்த நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.